கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நகை வாங்குவீங்க
பதிவு செய்த நாள்
17
ஆக 2019 13:31
இந்த மாதம் சனி, கேது நன்மை தருவர். புதன் ஆக.21 வரையும், செப்.7க்கு பிறகும் சாதகமான நிலையில் இருந்து நற்பலன் கொடுப்பார். சுக்கிரன் செப்.10க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.
குருபகவான் ராசிக்கு 10ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. பொருள் நஷ்டம், மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்தநிலை மறையும். துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஆக.21 முதல் செப். 7 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சற்று பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஆக.23,24,25 ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செப். 7,8,9 ல் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.12,13,14ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.7 க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, நகை வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி காண்பீர்கள். செப்.10க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.21க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். செப்.5,6ல் அதிர்ஷ்டவசமாக நன்மை கிடைக்கும். செப்.7க்கு பிறகு வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். செப்.6,7ல் அதிர்ஷ்ட வசமாக வருமானம் உயரும். செப்.7க்கு பிறகு எதிரி தொல்லை விலகும். லாபம் அதிகரிக்கும். கூடுதல் வளர்ச்சி காணலாம்.கலைஞர்களுக்கு பெண்களால் ஏற்பட்ட பிரச்னை அனைத்தும் செப்.10 க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பர். குருவின் பார்வையால் ஆசிரியர்கள் அறிவுரை பயனுள்ளதாக அமையும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். ஆக.21 முதல் செப்.7 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக பழங்கள், கிழங்கு வகைகள் மூலம் லாபம் காண்பர். கால் நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும்.
பெண்களுக்கு சகோதரர்கள் உறுதுணையாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடந்தேறும். மாத முற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆக.30,31ல் விருந்து, விழா என செல்வர். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். ஆக.21,22, செப்.17ல் சிறப்பான பலன் கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கும். ஆக. 21 முதல் செப். 7 வரை கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். செவ்வாயால் உடல் நலம் சுமாராக இருக்கும்.
* நல்ல நாள்: ஆக.21,22,28, 29,30,31, செப்.5,6,7, 8,9,12,13,14,17 * கவன நாள்: செப்.1,2 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 4,6 * நிறம்: சிவப்பு, கருப்பு
பரிகாரம்: ● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை ● புதனன்று பசுவுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை ● ஏகாதசியன்று மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை
|