பதிவு செய்த நாள்
23
டிச
2011
11:26
கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமந் ஜெயந்தி பெருவிழா நாளை 24ம்தேதி கோலாகலமாக நடக்கிறது. கும்பகோணம் ஸ்ரீநகர்காலனியில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகர் திருக்கோவிலினை அடுத்தாற்போல் அனுக்ரக ஆஞ்சநேயர் திருக்கோவில் கொண்டுள்ளார். நாளை 24ம்தேதி அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனுக்ரக ஆஞ்சநேயருக்கு காலையில் மஹாமாலா மந்திர ஹோமமும், காலை 9.45 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதையடுத்து மகாதீபாரதனையும், பின்னர் முற்பகல் 12மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் நாம சங்கீர்த்தனமும், ஜெயலட்சுமி விலாஸ பஜனை சபா குழுவினரின் பக்திப்பாடல்களுடன் ஸ்ரீநகர் காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுக்ரக ஆஞ்சநேயர் திருவீதியுலா நடைபெறுகிறது.இரவு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் அளிக்கப்படுகிறது. மாலையில் நடைபெறும் விழாவிற்கு சிட்டியூனியன்வங்கி தலைவர்பாலசுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். ஆஞ்சநேயரின் திருவீதியுலாவை சிட்டியூனியன் வங்கி தலைமை பொதுமேலாளர் மோகன் தொடங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை பிரிமியர் குழுமத்தின் மேலாண் இயக்குனர் சௌந்தரராஜன் செய்துவருகிறார். இதேபோன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் அமைந்துள்ள அனுமார் கோவிலில் அனுமத் ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 10மணிக்கு விசேஷ மூலவர் உற்சவர் திருமஞ்சனமும், மதியம் 12மணிக்கு பிரசாத வினியோகமும் நடைபெறுகிறது. மாலை ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரமும், இரவு 7மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். *கும்பகோணம் அருகே புளியம்பேட்டை அருகில் உள்ள விஜயலட்சுமி நகரில் அருள்பாலிக்கும் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று தினப்படி பூஜைகளுடன் காலை 7 மணியளவில் சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடக்கின்றது. மாலை வெண்ணைக்காப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மூல நட்சத்திர விழாக்குழுவினர் செய்துஉள்ளனர். இதே போன்று கும்பகோணம் புதுப்பாலம் அருகில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலிலும், கும்பகோணம் சகாஜி தெருவில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.