பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
16:44
லட்சிய உணர்வுடன் செயலாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!
சனீஸ்வரர் சோதிப்பார் குரு சாதிக்க வைப்பார்
ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 11ல் உள்ள குரு, செப்.1ல் 12-ம் இடமான துலாம் ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் உங்கள் ராசிக்கு வருகிறார். ராசிக்கு 10-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜூலை 26ல் 9-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். கேது 4-ம் வீடான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 3-ம் இடமான மகரத்திற்குச் செல்கிறார். ஜென்ம ராசியில் இருக்கும் சனி, டிச.18ல், 2ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலைகளின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல் 14 – ஜூலை31
ஏழரைச் சனி காலம் என்பதால் பின்னடைவு ஏற்பட்டாலும் குருவால் தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வசதியான வீட்டிற்கு குடி புகும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி விடாமுயற்சியால் நடந்தேறும். பணியாளர்களுக்கு சலுகை ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். குருவின் பலத்தால் லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் முன்னேற்றமான பலன் காண்பர். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.
ஆகஸ்ட்-1 – 2018 ஜனவரி 31
குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.தொழில், வியாபாரத்தில் ஆதாயம் படிப்படியாக உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். போட்டியாளர் வகையில் குறுக்கீடு உருவாகலாம். கலைஞர்கள் பலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. விவசாயிகள் நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர்.
2018 பிப்ரவரி- 1 – ஏப்ரல் 13
குருவின் பார்வை பலத்தால் நன்மை மேலோங்கும். கணவன், -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடலாம். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்கலாம். ஆனால், வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீட்டை தவிர்க்கவும். லாபம் சுமாராக இருக்கும். கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. ஆசிரியரின் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை தேவை.
பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவன், வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு. செல்ல வேண்டிய கோவில்மதுரை மீனாட்சியம்மன்.