உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழலில் புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுப மங்களமாக இருக்கும். இது ஏழரை சனியின் இறுதி காலம் என்பதை அறிவீர்கள். சனிபகவான் தற்போது ராசிக்கு 2ல் இருக்கிறார். ஏழரை சனியின் இறுதிக் கட்டமான இந்த காலத்தில் பணிச்சுமையைக் கொடுத்தாலும், அதற்கான பலன் தர தயங்க மாட்டார். சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரகதியில் இருக்கிறார். இந்த காலத்தில் கெடுபலன் தர மாட்டார். குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். பொருள் விரயம் ஏற்படும். குடும்பத்தில் தொல்லைகள் உருவாகலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போய் விட வேண்டாம். பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் நன்மை கிடைக்கும். நிழல் கிரகமான ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கன்னி ராசியில் இருந்ததால் பண இழப்பை தந்திருக்கலாம்.
முயற்சிகளில் தடையும் ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்ப்பாடு அனைத்தும் விலகும். ஜன. 8 முதல் ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை இருந்த பிரச்னை இனி இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை ஏற்படுத்துவார். பெண்களால் நன்மை கிடைக்கும். ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. கேது இதுவரை 6-ம் இடமான மீனத்தில் இருந்து பொன்,பொருளை வழங்கினார். இப்போது 5-ம் இடமான கும்பத்திற்கு கேது வருகிறார். இதனால் அரசு வகையில் பிரச்னையைச் சந்திக்கலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். மேற்கண்ட கிரகங்களின் நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பிப்.7 க்குப் பிறகு குருவால் வருமானம் பெருகும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்குப் புதிய பதவி கிடைக்க யோகமுண்டு. அதே நேரம் ஜூலை மாதத்திற்கு பிறகு தடைகளைச் சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குருவக்கிர காலத்தில் கைகூடும். ஜூலை மாதத்திற்கு பிறகு உறவினர் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத்தகாத பிரச்னை வரலாம். வீடு, மனை வாங்கும் யோகம் தள்ளி போகலாம். செலவு அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை.
தொழில், வியாபாரம்: ராகுவின் பலத்தால் போதிய வருமானம் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும். நெல், கோதுமை போன்ற தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஜூலை மாதத்திற்கு பிறகு பொருள் விரயம் ஏற்படலாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இது ஏழரை சனிகாலம் என்பதால் புதிய தொழில் தொடங்க வேண்டாம். ராகுவின் பலத்தால் பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கேதுவால் எதிரி தொல்லை அவ்வப்போது தலைதுõக்கலாம். கவனமாக இருக்கவும்.
பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான நிலையில் இருப்பர். வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பிப். 7க்கு பிறகு நிலைமை சாதகமாக அமையும். வேலைப்பளு குறையும். தடைபட்டு வந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகளிடம் நன்மதிப்பு உண்டாகும். வேலை இன்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். ஜூலை மாதத்திற்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
கலைஞர்கள்: முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற முடியும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள்: எதிர்பார்ப்பு இல்லாமல் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டியதிருக்கும். ஆனால் ஆக.1க்கு பிறகு நன்மை அதிகரிக்கும்.
மாணவர்கள்: குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள்: அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். ஜூலை மாதம் வரை மானாவாரி விவசாயத்தில் ஈடுபடுவது நல்லது. அதன்பின் நெல், கோதுமை, பழவகைகள், கேழ்வரகு போன்ற பயிர்களிலும் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.
பெண்கள்: குடும்பவாழ்வில் மகிழ்ச்சி யுடன் காணப்படுவர். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். வேலை பார்க்கும் பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.