பதிவு செய்த நாள்
29
டிச
2015
14:06
பிறரின் அன்புக்கு கட்டுப்படும் கடக ராசி அன்பர்களே!
சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு சுக்கிரன் பகை கிரகமாக இருந்தாலும் நன்மை தரும் இடத்தில் இருக்கிறார். அவரின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் பெரும்பாலான காலத்தில் அவர் நன்மை தருவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரியோர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனை கிடைக்கும். குரு பகவான் 3-ம் இடமான கன்னியில் உள்ளார். பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். எனினும், குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளதால், எந்த இடையூறையும் முறியடிப்பீர்கள். மேலும் குரு பிப். 7ல் வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு
மாறுகிறார். ஜூன் 20ல் வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் சிம்ம ராசிக்குள்ளேயே இருக்கிறார். ஆக. 1ல் தான் கன்னி ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சனி பகவான் 5-ம் இடத்தில் இருப்பதும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் சில பிரச்னைகளைத் தருவார். ஆனால் அவரது 7-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பலனை காணலாம். ஆண்டு தொடக்கத்தில் குரு பார்வையால் கூடுதல் பலன் பெறலாம். அதற்காக அவரின் வக்கிர காலத்தில் கட்டு கட்டாக பணம் செலவழிந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு லட்டு லட்டா வருமானம் இருக்கும். பிப். 7க்கு பிறகு மந்தநிலை மாறும். துணிச்சல் பிறகும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி எடுபடாமல் அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். இந்த பலன்கள் ஆக. 1 வரை கிடைக்கும். அதன் பிறகு குருவின் 5-ம் இடத்தின் பார்வை மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். 7-ம் இடத்துப் பார்வை மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. 9-ம் இடத்துப்பார்வை மூலம் உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். தொழில், வியாபாரம்: சனிபகவானின் வக்கிர காலத்தில் லாபம் கிடைக்கும்.புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல வளம் காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறலாம். அலைச்சலும், வெளியூர் வாசமும் அடிக்கடி இருக்கும். அரசு உதவி கிடைக்கும். பணவிஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
பணியாளர்கள்: பெரிய அளவுக்கு பலன் இராது. அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரி களிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலர் வீண் மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். எனினும், குருவின் பார்வை வேலையைத் தக்க வைக்கும்.
கலைஞர்கள்: பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவர். ஜூன் வரை புதிய ஒப்பந்தங்களும் தங்கு தடையின்றி கிடைக்கும். ஜூலை மாதத்திற்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அப்போது எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம். என்றாலும் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
அரசியல்வாதிகள்: அனைத்து வகையிலும் முன்னேறி பதவி, பாராட்டு கிடைக்க பெறுவர்.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். அடுத்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகள்: உழைப்பிற்கு ஏற்ற பலன் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் நெல், கோதுமை, கொண்டை கடலை ஆகிய பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை எள், கொள்ளு, பயறு வகைகளில் நல்ல மகசூல் காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியும், பொருள் சேர்க்கையும் பெறுவர். சிறு தொழில் செய்பவர்கள் மேலும் முன்னேற்றம் காணலாம்.
பெண்கள்: தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆண்டின் முற்பகுதியில் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளம் காணலாம்.
பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். அம்மன் வழிபாடு மிகவும் உயர்வை தரும். புற்றுள்ள கோவில்களில் நாகருக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள்.
செல்ல வேண்டிய கோவில்: மதுரை மீனாட்சியம்மன் கோவில்.