Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தன் பலம் அறியா பராக்கிரமன்
 
பக்தி கதைகள்
தன் பலம் அறியா பராக்கிரமன்

சீதை கடத்தப்பட்டதை பார்த்தவர்கள் மூலம் அவளை ராவணன் தான் சிறை  வைத்திருப்பான் என்பது தெரிய வந்தது. அவனது அரண்மனை, கோட்டை  கொத்தளம் என எங்கு அல்லல் படுகிறாளோ  தெரியவில்லையே! முதலில்  எங்கிருக்கிறாள் என்பதை கண்டறிந்து, தூதுவனை ராவணனிடம் அனுப்ப  வேண்டும். சமாதானத்திற்கு சம்மதிக்கா விட்டால் போர் தொடுப்பது தான்
ஒரே வழி.

ராமன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

சரி... தூதுக்கு யாரை அனுப்பலாம்?

மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லாமல் ராமனுக்குத் தோன்றிய ஒரே முகம்  அனுமன் தான்!

இதற்கிடையில் கிஷ்கிந்தை – இலங்கைக்கு இடையே  கடலை யார் கடப்பது  என்பதில் வானரங்கள் இடையே போட்டி ஏற்பட்டது. வாலி மைந்தனான அங்கதன் முன்வந்தான்.  ஆனால் கரடி மன்னனான ஜாம்பவான், அப்பணிக்கு அனுமனே  தகுதியானவன் எனத் தெரிவித்தான். இதைக் கேட்ட அனுமன் ஆச்சரியம்  கொண்டான். கடலைக் கடப்பது தனக்கு சாத்தியமா என மயங்கினான்.

""அனுமா.. உன் பலம் உனக்கு தெரியாது. காரணம் அவ்வாறு  சபிக்கப்பட்டிருக்கிறாய். உன் வரலாற்றை சொல்லப் போகிறேன். அதைக்  கேட்டால் தெம்பும், உடல் வலிவும் உண்டாகும்.. பார்” என ஜாம்பவான் உற்சாகம்  கொடுத்தான்.  

மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது என்பார்களே அது உனக்கு பொருந்தும். குழந்தை  பருவத்திலேயே உடல்வலு உனக்கு அபாரமானதாக இருந்தது. செயலாற்றல்  எல்லாம் பிரமிக்கத்தக்கதாக இருந்தன. நண்பர்களுக்கு உன் செயல்கள் பொழுது  போக்குமட்டுமின்றி,  திகில் ஊட்டுவதாகவும் இருந்தன.

வாயு வேகத்தில் பறந்து, பார்ப்போரைப் பரவசப்படுத்துவாய். மலைச்  சிகரத்திலிருந்து தாவிக் குதிக்கும் போது உன் அன்னை அஞ்சனாதேவி  தவிப்பாள். ஆனால் காற்றில் தவழும் இலை போல வந்து நீ தரையில் இறங்கும்  மென்மை, காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும்.

நண்பர்கள் ஒருமுறை "அனுமா... இந்தக் கள்ளிச் செடியை வேரோடு பிடுங்கி எறி, பார்க்கலாம்? எனக் கேட்டனர். உடனே அதை மட்டுமின்றி  சொல்லாததையும் நீ  செய்தாய். ஆமாம், செடியைப் பிடுங்கும் போது  பெரிய மரம் ஏதேனும்  இடையூறாக இருந்தால் அதை பிடுங்கி விட்டு, கள்ளிச் செடியில் கை வைப்பாய்!
அப்போது நண்பர்களின் ஆரவாரம் எதிரொலிக்கும். ஒரு மரத்தையே வேரோடு  பிடுங்கும் ஆற்றல் உள்ள இவனிடம் போய், சிறு செடியைப் பிடுங்கச் சொல்லி  சவால் விட்டோமே என அவர்கள் வெட்கப்படுவர்.  

சிறுவனான நீ ஒருநாள் அதிகாலையில் எழுந்து விட்டாய். கிழக்கு திசையில்  வானில் சிவப்பான பந்து ஒன்று தோன்றக் கண்டாய். இலை, கிளை இல்லாத  வானம் என்னும் மரத்தில் தனியாக பெரும் பழம் இருப்பதைக் கண்டு
குதூகலித்தாய். இந்தப் பழத்தை தாவிப் பறித்து உண்டால் என்ன என்று உனக்குத் தோன்றியது.

அப்படியே ஏறிப் பாய்ந்த நீ கைகளை நீட்டியபடி சூரியப் பந்தை நெருங்கினாய்.  
அன்று கிரகணம் என்பதால் சூரியனைக் கவ்விப் பிடிக்க, பாம்பு கிரகமான ராகு  வந்தது.  தன்னை விட வேகமாக சூரியனை நெருங்கும் உன்னைக் கண்டு  அச்சப்பட்டான் ராகு. கடமையை நிறைவேற்ற முடியாதபடி சிறுவன் செய்து  விடுவானோ எனப் பதறி தேவலோக அதிபதி இந்திரனிடம் முறையிட்டான்.  
சூரிய கிரகணம் நிகழாவிட்டால் இயற்கையை மீறியதாகுமே என கருதி, தெய்வக் குழந்தையான உன்னைத் தடுக்க வஜ்ர ஆயுதத்தை வீசினான் இந்திரன்.
அது உன் தாடையைத் தாக்கவே, மூர்ச்சையடைந்து கீழே விழுந்தாய். மயங்கிய  உன்னை தாய் அஞ்சனை தன் மடி மீது கிடத்தி அழுதாள்.

தெய்வக் குழந்தையான உன்னைத் தாக்கியது தவறு என உணர்ந்த இந்திரன்  ""அம்மா அஞ்சனா! உங்கள் மகனைத் தாக்கியது நான் தான். வான மண்டலத்தில்  தாவிப் பறந்து சூரியப் பழத்தைப் பறிக்க வந்தான். ஆனால் இன்று சூரிய கிரகணம் என்பதால் ராகுவின் பணியைச் செய்வதற்கு  இடையூறாக வந்ததால் தடுக்க  வேண்டியதாகி விட்டது” என்றான்.

வஜ்ர ஆயுதம் தாக்கியதால் தாடை சுருங்கி, அனுமனின் முகம் மாறியதை  வேதனையுடன் பார்த்தாள் அஞ்சனை.

அன்று முதல் உன் முகத்தோற்றம் மாறியது. ஆனாலும் பழைய  விளையாட்டுகளை நீ மறக்கவில்லை. கல்லெறிவது, பெரிய மரங்களை வேரோடு  பிடுங்குவது, தோள்கள், முதுகில் ஏழெட்டு நண்பர்களைத் துாக்கியபடி ஓடுவது  என சூரத்தனம் செய்து வந்தாய்.  

உன் குறும்புத்தனத்தால் பாதிக்கப் பட்டவர்களும் இருக்கவே செய்தார்கள்.  பக்கத்து காட்டில் வாழும் முனிவர்கள் தான் அவர்கள்.  தொடக்கத்தில்  அவர்களின் தவச்சாலைக்குள் மரம், மட்டை, கற்கள் என விழுந்த போது யாரும்  பொருட்படுத்தவில்லை. ஆனால் பெரிய மரங்களே பொத்தென விழுந்தது. அரக்கன் அல்லது பிசாசு வேலை என முனிவர்கள் வெகுண்டனர். ஆனால் அக்கிரமம்  செய்பவன் சிறுவன் எனத் தெரிந்த போது திகைத்தனர்.

"இளம் வயதிலேயே இப்படி ஒரு பராக்கிரமமா? பெரியவனாக வளர்ந்தால்  இன்னும் பலம் கூடுமே! அதை நல்வழியில் பயன்படுத்துவானா? அல்லது  தீயவழியில் இறங்குவானா? என யோசித்தனர்.  

தன் பலத்தை தானே உணர முடியாதபடி சாபம் தர முடிவெடுத்தனர். " உன்  பேராற்றல் உனக்கே தெரியாமல் போகட்டும் என அனுமனிடம் தெரிவித்தனர்.
ஜாம்பவன் கூறியதைக் கேட்ட அனுமன் வருந்தவில்லை.  ஆரவாரம் மறைந்து  மனதில் அமைதி நிலவுவதை உணர்ந்தான். தன்னை சபித்தவர்களிடம், தான்  செய்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்டதோடு, பாடம் கற்றுத் தரவும்  வேண்டினான்.  

முனிவர்களுக்கோ அதிர்ச்சி. சாபம் பெற்றவன் தம்மிடமே பாடம் கேட்க  வந்திருப்பதை வரவேற்றனர். வேத சாஸ்திரங்களை உபதேசித்தனர். சாபத்துக்கு  விமோசனம்  கேட்காத அனுமனின் வீரம் கண்டு வியந்தனர். தன் தவறுகளுக்கு  தண்டனையாக சாபம் பெற்ற அவன், பிராயச்சித்தம் தேடாமல் இருப்பது தனக்குத் தானே விதித்துக் கொண்ட தண்டனை என தீர்மானித்தான் அவன்!

தன் வலிமை தனக்கே தெரியாமல் போனதை உணர்ந்த அனுமன் மனதிற்குள்  சிரித்தான். "ஸ்ரீராமனுடன்  இணைந்ததை விடவா பெரிய வலிமை எனக்கு வரப்  போகிறது? அவர் நாமத்தை உச்சரித்தாலே போதுமே... உலகையே வெல்லும்  ஆற்றல் வருமே! என தலை நிமிர்ந்தான்.  "ராம், ராம்... என ஜபித்தபடி  விஸ்வரூபம் எடுத்து அனுமன் கடலைக் கடந்தது  இலங்கை மண்ணில் காலடி  வைத்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar