Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராசாத்தியும் ஒரு பக்கிரியும்!
 
பக்தி கதைகள்
ராசாத்தியும் ஒரு பக்கிரியும்!

நலிந்தவர்க்கும், நல்லவர்க்கும் நாளுமில்ல கிழமையுமில்லன்னு சொல்லுவாங்க. இது வெறும் பழமொழியா மட்டுமில்லாம, அந்தக்கால நடப்பே அதுவாத்தான் இருந்தது. பஞ்சமும், பசியுமா கெடந்த காலத்தில, யாரு நாளயும், நட்சத்திரத்தையும் பாத்தது... வயித்த கழுவ வழியுண்டான்னு அவனவன் தன் பாட்டக் கழிக்கறதுக்கு தான் போராடினான். கோவிலுக்கும் போகல, கொளத்துக்கும் போகல. ஆனா, காலையில எந்திரிச்சதும், பல்ல வெளக்கி, மொகம் கழுவி, சாமியக் கும்பிட்டு, நெத்தி முழுக்க திருநீர பூசி, வேல வெட்டின்னு ஓடினான். ஆடி மாசப் பொறப்பா, அன்னிக்கு வீட்டுல ஆக்கினத சாமிக்கு படைச்சு, குடும்பத்தோட ஒக்காந்து சாப்பிட்டான். பொங்கலு, தீவாளின்னு வருஷத்துக்கு நாலஞ்சு பண்டிகையில மட்டும் சாமியக் குடும்பத்தோட நின்னு கும்பிட்டான்; படையல் போட்டான்.
 
மனசுல சூது, வாது, வஞ்சகம்ன்னு இல்லாம தெளிஞ்ச நீரோட்டமா இருந்தது, அவன் வாழ்க்கை. இப்ப, அப்படியா இருக்கு... மனசும் கெட்டுப் போச்சு; மனுசன் வாழ்க்கையும் தெசை மாறி, பாவமும், சூதும் நெறஞ்சு போச்சு. அதான், செஞ்ச பாவம் போயிடாதான்னு அவனவன் கோவிலு, கொளம்ன்னு அலையத் துவங்கிட்டான். நாட்டை கொள்ளையடிச்சிட்டு, சாமிக்கு ஒரு பங்கு குடுத்தா சரியாப் போயிரும், சாமி காப்பாத்திடும்ன்னு நம்புறான். அப்பாவி மட்டுமல்ல, அப்பட்டமான பாவியும் கோவிலத் தேடித்தான் அலையறான். அதோ போறாளே ராசாத்தி... அவளுக்கு கோவிலும், கொளமும் உசிரு; நெற்றி நிறைய திருநீரும், குங்குமுமாத்தான் அலையறா. ஆனா, இவ, எந்த வகையில சேத்தின்னுதான் தெரியல. கல்யாணங் கெட்டிக் குடுத்தாக... நல்ல எடம்; வீடு, வாசல் எல்லாமே ஓகோன்னுதான் இவ போன எடத்தில அமஞ்சிருந்தது. ஆனா, வாழ்க்கை தான் நல்லா அமையாமப் போயிருச்சு. கல்யாணம் முடிஞ்ச ஆறாவது மாசமே பொறந்த வீட்டுக்குத் திரும்பி வந்துட்டா. என்ன காரணம்ன்னு யாருக்கும் தெரியல; புருஷங்காரனும் இவளத் தேடி வரவுமில்ல; பஞ்சாயத்து பண்ணவுமில்ல. அவன் அங்க, இவ இங்கன்னு ஆகி, ஏழெட்டு வருஷமாயாச்சு. மக வாழ்க்கைய நெனச்சு நெனச்சே அப்பன்காரனும் ஆண்டவன் காலடிக்குப் போயாச்சு; அவ, அம்மாவும் படுத்த படுக்கையாச்சு. இவ, எதப் பத்தியும் கவலப்படாம கோவில், கொளம்ன்னு அலையுறா.

பொறந்த வீட்டுல சொத்துச் சொகத்துக்கு கொறைவில்ல. ஆனா, ஒடல் சொகத்தத்தான் எல்லாரும் தொலைச்சிட்டு நிக்கிறதாத் தெரியுது. ஒருவேள, தன்னை, தன்னோட புருஷங்காரன் வந்து கூட்டிட்டு போகணும்ன்னு, சதா சர்வ காலமும் சாமி பக்தியில அலையுறாளா அல்லது படுக்கையில விழுந்து கிடக்குற அம்மாவுக்கு சொகம் கெடைக்கணும்ன்னு அலையுறாளாங்கறது அந்த சாமிக்குத்தான் வெளிச்சம். சாமியக் கும்பிடட்டும்; கோவிலு கோவிலா போகட்டும்... அதுக்காக, படுக்கையே கெதின்னு கெடக்கற பெத்தத் தாயிக்கு, வேளா வேளைக்கு குடுக்க வேண்டியதக் குடுத்துட்டு அலையறதுக்கென்ன... பாவம் அந்த அம்மா... தவிச்ச வாய்க்கு தண்ணி கூட குடிக்க முடியாம, வாய வாயப் பொளந்துகிட்டுக் கெடக்கறா. அக்கம் பக்கத்துல உள்ளவங்க அப்பப்ப போயி எட்டிப் பாத்தாத்தான் உண்டு. ராசாத்திகிட்ட இதப்பத்தி அம்மாகாரி பேசினா, எல்லாம் ஒனக்காகத்தான் கோவிலு கோவிலா அலைஞ்சு, எங்கம்மய்க்கு நல்ல சொகத்தக் குடும் சாமின்னு நேந்துகிட்டு அலையுதேன். ஒனக்கு ஒண்ணு ஆயிற்றா, எனக்கு ஆதரவுக்கு யாரு இருக்கான்னு... அழுது கண்ணீர் வடிக்கறாளாம். தாய்க்காரிக்கு, தன் மகள நெனச்சு அழத்தான் முடியுது.
எங்கூர்ல பெரிய சிவன் கோவிலு இருக்கு; எப்பவாவது மனசுக்கு நிம்மதி இல்லன்னா அங்க போவேன். வெளிய நின்னே சாமியக் கும்பிட்டுட்டு, கோவிலுக்கு வெளியே எப்பவும் உக்காந்திருக்கற பக்கிரி முன் போயி உக்காந்துருவேன். அந்த ஆளு ஒரு புதிருதான்; சாமியாரா... சாதாரண ஆசாமியா, பிச்சைக்காரனா அல்லது கிறுக்கனான்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியல. யாருகிட்டயும் பேச மாட்டாரு; முகத்துல எந்த ஒணர்ச்சியும் காட்ட மாட்டாரு...

நான், அங்க போகும்போதெல்லாம் அவருகிட்டப் போயிதான் உக்காந்திருப்பேன். ஆனா, அவரு என்னை ஏறெடுத்துப் பாத்ததுமில்ல; ஏன்னு கேட்டதுமில்ல. எப்பவும் அவர சுத்தி ஏழெட்டு பேராவது நிப்பாங்க. யாரையுமே அவரு கண்டுகிட்டது கெடையாது. கோவிலுக்கு போயி அர்ச்சனை பண்ணிட்டு வெளியில வர்றவங்க சக்கரப் பொங்கலு, சுண்டலு, தேங்காப் பழம்ன்னு சந்தோஷமா அவரு முன் கொண்டு வந்து வெச்சா, அதுக்கு எதிர்ப்பும் சொல்றதில்ல; அதச் சாப்பிடுறதுமில்ல. யாராவது பசியும், பட்டினியுமா இருந்தா, அவங்ககிட்ட கையக் காட்டி, எல்லாத்தையும் எடுத்துக்கச் சொல்வாரு. கொழந்த இல்லாத பொம்பளங்க, அவரு எதயாவது தரமாட்டாரான்னு கண்கலங்க பாத்துகிட்டே நிப்பாங்க. அவருக்குத் தோணிச்சுன்னா எடுத்துக் குடுப்பாரு; அத வாங்கி அமிர்தம் போல நெனச்சுச் சாப்பிடற பொம்பளைக்கு கட்டாயம் கொழந்த பொறக்குதுன்னு சொல்லிக்கிட்டாங்க. ஆனா, அவரு எதையும் கையில எடுத்துத் தின்னத நான் பாக்கவுமில்ல; கேள்விப் பட்டதுமில்ல. அன்னைக்கு கோவில்ல கும்பாபிஷேகம்; சாமியக் கும்பிட்டுட்டு, பக்கிரி முன் வந்து உக்காந்திருந்தேன். பூசையெல்லாம் முடிஞ்சு, நடு மத்தியானத்துக்கு மேலதான் சாமி கும்பிட வந்தவங்கெல்லாம் வெளியில வந்தாங்க. நெத்தியெல்லாம் சந்தனம், குங்குமம், திருநீருன்னு செறப்பா வெளியில வந்த ராசாத்தி, சாமிக்கு அர்ச்சன பண்ணுன சர்க்கரப் பொங்கல், தேங்காப் பழம்ன்னு எல்லாத்தையும் கொண்டு வந்து பக்கிரி முன், பய பக்தியோட வைச்சா... அவள, கோபத்தோட மொறச்சுப் பார்த்த பக்கரி, கும்பி கொதிச்சுப் போயி பெத்தவ செத்துகிட்டிருக்கறா... ஒனக்குக் கும்பாபிஷேகம் பாக்கற பவுசா... பெத்தவளப் பாக்காம கோவிலுக்கு வந்துருன்னு சாமி கூப்பிட்டுச்சா... போ போ... இங்கன வராதே, என்றார். அவர் கோபப்பட்டு பேசியத அன்னிக்குத்தான் பாத்தேன். ராசாத்தி அழுதுகிட்டே ஓட்டமும், நடையுமா வீட்டை நோக்கிப் போனா... அப்பத்தான், இவரு பக்கிரியில்ல; சித்தர்ன்னு தெரிஞ்சுகிட்டேன்.- தாமரை செந்துார் பாண்டி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar