Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காசி விஸ்வநாதர் (கைவிடேலப்பர்) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காசி விஸ்வநாதர் (கைவிடேலப்பர்) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காசி விஸ்வநாதர்
  அம்மன்/தாயார்: விசாலாட்சி
  புராண பெயர்: கைவிழுந்த சேரி
  ஊர்: கைவிளாஞ்சேரி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம், பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி, சிவராத்திரி, விசாலாட்சி அம்மன் சன்னிதியில் நவராத்திரி, பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. மார்ச் மாதம் கடைசி ஞாயிறு அன்று கைவிடேயப்பருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே கைவிடேயப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவே இங்கு பிரதானம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காசி விஸ்வநாதர் (கைவிடேலப்பர்) திருக்கோயில் கைவிளாஞ்சேரி, சீர்காழி நாகப்பட்டினம் 609 111.  
   
போன்:
   
  +91 94439 11905, 88831 76439 
    
 பொது தகவல்:
     
  முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே புகுமுன் ராஜ கோபுரத்திற்கு வெளியேவலதுபுறம் ஜிதேந்திரிய செல்ல  ஆஞ்சநேயரும், இடது புறம் அரசமரத்து விநாயகர் மற்றும் ராகு கேதுவும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தின் மேற்கில் செல்வ விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, சுற்றுப்பிரகாரத்தில் கமல விநாயகர், வடக்கில்  துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தேவகோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவே இங்கு பிரதானம்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள கைவிடேலப்பரை வணங்குகின்றனர். திருமணம் விரைவில் நடைபெற இங்குள்ள கல்யாண விநாயகரை ராகுகால நேரத்தில் வணங்குகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் கைவிடையப்பருக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்கின்றனர். சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயில் சிறியது ஆயினும் சாஸ்தா வரமளித்து காக்கும் கடவுளாக அருள்பாலிக்கிறார். இந்திராணியை கைவிடாது காப்பாற்றிய இடமாதலால் கைவிடேலப்பர் என்ற திருப்பெயர் சாஸ்தாவுக்கு ஏற்பட்டது. கோயிலின் தென்கிழக்கு மூலையில் பூரண புஷ்கலா சமேதராக கைவிடேலப்பர் அருள்பாலித்து வருகிறார். சீர்காழி தென்பாதியில் விஸ்வநாதர் கோயில் பகுதியிலேயே இந்த சாஸ்தா தன் தேவியரான பூரண, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறுகாலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு காஞ்சிப்பெரியவர் வந்து தரிசனம் செய்திருக்கிறார். இவ்வூரிலுள்ள மக்களும் அருகிலுள்ள ஊர்களிலுள்ளவர்களும் சபரிமலை செல்லும் முன் இங்கு வந்து கைவிடேயப்பரை தரிசனம் செய்த பின்னரே  பக்தர்கள்  தங்களது பயணத்தைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இருமுடி கட்டிக்கொண்டு தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்குகின்றனர். சுற்றிலும் நீண்ட திருமதிற் சுவர்களைக் கொண்ட இடத்தில் எதிரே காசிவிஸ்வநாதர் கோயிலும் அமைந்துள்ளது. இரண்டு கோயில்களும் ஒரே மதிற்சுவரின் உள்ளே அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரத்தில் நந்தியம் பெருமான் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இங்கு அன்னை நான்கு கரங்களுடன், மேல் கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் கருணையே வடிவாக காட்சி தருகிறாள். இந்திரன் மனைவி இந்திராணியை கைவிடாது காப்பாற்றிய கைவிடேயப்பர், தங்களது கோரிக்கைகளைத் தீர்த்து வைத்து தங்களையும் கை விடாது காப்பார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும் அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தைக் கைப்பற்றிய அவர்கள் இந்திரலோகத்தையும் கைப்பற்றினார்கள். அங்கும் ஆட்சி அமைத்தார்கள். இந்திர லோகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த தேவர்களின் தலைவனான இந்திரன், இந்திராணியுடன் பூலோகம் வந்தான். சீர்காழி என்ற புண்ணியத் தலத்தில் உள்ள மூங்கில் காட்டில் தங்கி மூங்கிலாக வடிவெடுத்து இருவரும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இந்திரலோகத்தை மீட்டுத் தரும்படி சிவபெருமானை பகல் வேளையில் தவமிருந்து வழிபட்டனர். இரவில் யார் கண்ணிலும் படாதபடி மறைந்து சென்று சாஸ்தாவின் கையில் உள்ள தாமரை பூவிதழ்களின் நடுவே தங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இவர்களது கடும் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், சிவலோகம் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கக் கூறினார்.

இந்திரன், இந்திராணியை சாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு சிவலோகம் சென்றான். சில காலத்திற்குப் பின், சாஸ்தா தனது காவல் கணக்குகளை சிவபெருமானிடம் ஒப்படைப்பதற்காக சிவலோகம் வந்தடைந்தார். அப்படி வருமுன் இந்திராணியை தனது தளபதியான மகாகாளரிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரபத்மனின் தங்கை ஆஜமுகி, அழகே உருவான இந்திராணியை தன் அண்ணனுக்கு மணமுடிக்க எண்ணி, அவளை கவர்ந்து செல்ல முயன்றாள். இதைக் கண்டு கோபமடைந்த மகாகாளர், ஆஜமுகியிடம் சண்டையிட்டார். அவளது கரத்தை வெட்டியதும், அலறியடித்து ஓடினாள். மகாகாளர் இந்திராணியை மீட்டார். அரக்கியான ஆஜமுகியின் கை விழுந்த காடு கைவிழுந்த சேரி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது  கைவிளாஞ்சேரி அழைக்கப்படும் ஊராகும். சாஸ்தா தனக்கு அளித்த பொறுப்பை ஏற்று இந்திராணியை காப்பாற்றி பேரருள் புரிந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த இடமாகிய கைவிளாஞ்சேரி சீர்காழிக்கு அருகே உள்ளது. இங்கு சாஸ்தாவின் கோயில் உள்ளது. இந்திராணியை கை விடாது காப்பாற்றிய சாஸ்தா இங்கு கைவிடேயப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் உள்ளே கைவிடேலப்பர் பூரணை, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவே இங்கு பிரதானம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar