Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெங்கடேசப் பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தீர்த்தம்: புஷ்கரணி
  ஆகமம்/பூஜை : பாஞ்சாத்தர ஆகம முறைப்படி 2 கால பூஜைகள்
  ஊர்: பரமேஸ்வரன் பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலில் சித்திரை முதல் நாள், ஆனித்திருமஞ்சனம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனி மற்றும் அனைத்து சனிக்கிழமைகள், நவராத்திரி, தீபம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன் நடைபெறுகின்றன. சனிக்கிழமைகளிலும் முக்கிய விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்திலும் அக்டோபர் மாத இரண்டாவது வாரத்திலும் காலையில் சூரிய ஒளிக்கதிர் கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர் மீது விழும் அற்புத காட்சி - சூரிய பகவானே தன் ஒளிக்கதிர்களால் கொங்கு திருப்பதி பெருமாளைத் தொழுவதாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. இக்கோயிலை உருவாக்கிய சிற்பிகள் வாணியல் சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்ததை உறுதி செய்கின்றது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், பரமேஸ்வரன்பாளையம் தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91  
    
 பொது தகவல்:
     
  கருவறை வெளிச் சுவற்றில் பல்வேறு கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுக்கள், மீன் சின்னங்கள் யாளி, மற்றும் பெரிய மீன் ஒன்று பாதி யானையை விழுங்கும் காட்சி என புடைப்புச் சிற்பங்களாக அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபத்துக்கு முன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள முன் மண்டபம் உள்ளது. அர்த்த மண்டப வாயிலில் ஜெய விஜயன் கம்பீரமாக காவல் புரிகின்றனர். தெற்குப் பகுதியில் ராமனுஜர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் ஒன்றாக சேவை சாதிக்கும் சன்னிதி உள்ளது. வடக்குப்பகுதியில் நில வறை உள்ளது. அந்நியர் படையெடுப்பின் போது இறைத் திருமேனிகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட அறை இது. மகா மண்டபத்தின் வெளியே கருட மண்டபத்தில், கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில், அற்புத கலையம்சத்துடன் பெருமாளை நோக்கி கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கருட மண்டபத்தை அடுத்து புதியதாக தாமிர தகடுகள் வேயப்பட்ட, நுணுக்கமான கலையம்சத்துடன் வடிக்கப்பட்ட கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது.

கோயிலின் வடகிழக்குப் பகுதிகள் ஆஞ்சநேயருக்கென விமானத்துடன் கூடிய தனி சன்னதி உள்ளது. முன்புறம் விலாசமான மண்டபம் எழிலுடன் காட்சியளிக்கிறது. கருவறையில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் இருகரம் குவித்து சேவை சாதிக்கின்றார். வெளிச் சுற்று மதிலின் வடக்குப் பக்கம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளைக் கொண்ட சொர்க்க வாசல் அமைந்துள்ளது. மண்டபத்தின் தொன்மை குன்றாமல் சீரமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இம்மண்டபத்தில் ஆமையும், நாகமும் புடைப்புச் சிற்பங்களாக வடித்திருப்பதைக் காணலாம். ஆதியில் ராஜகோபுரத்துடன் இருந்த நுழைவு வாயில் சிதைந்து விட்ட காரணத்தால் தற்போது ஒரு சிறிய முகப்பு மண்டபத்துடன் நிறுவியுள்ளனர். கோயிலுக்கு வெளியே சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த புஷ்கரணி தற்போது சிதைந்து முற்றிலுமாக அழிந்து விட்டது.
 
     
 
பிரார்த்தனை
    
  கிரக தோஷங்களினால் ஏற்படும் திருமணத்தடை, குழந்தையின்மை, புத்திரதோஷம், கடன் தொல்லைகள், மனநலக் குறைபாடு, உடல்நலக் குறைபாடு மற்றும் குடும்ப ஒற்றுமைக்கு சிறந்த பரிகார தலமாகும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சனிக்கிழமைகளில் நெய்விளக்கேற்றி பெருமாளை சேவித்து வேண்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கின்றன. 
    
 தலபெருமை:
     
  ஸ்ரீரங்கம் கோயிலைப் போலவே தென்கலை சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. மூர்த்தி, தலம் , தீர்த்தப் பெருமைகளைக் கொண்டது. இத்தலம் ஒரு ஒப்பற்ற பரிகாரத்தலமாக விளங்குகின்றது. ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் அத்தகைய தோஷத்திற்கு தன்னிகரற்ற தலமாகும்.

கோயிலில் நுழைந்தவுடன் புராதனமான இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை நன்கு உணர முடிகிறது. சிதைந்த நிலையில் இருந்த போது கூட திவ்யசக்தியில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. காரணம் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகா சக்தி வாய்ந்த எந்திரங்கள் தாம். வெங்கடேசப் பெருமானின் திவ்ய பார்வை நம்மீது பட்டால், எத்தகைய துன்பத்திலிருந்தும் தோஷங்களிலிருந்தும் விடுபட்டு வளமோடு வாழலாம் என்பது திண்ணம். திருவடிகளைக் காட்டிடும் பாங்கு என பெருமாளைக் காண கண்கோடி வேண்டும். மேலும் பெருமாள் பூமியை நோக்கும் பார்வை உடையவராக இருப்பது பெருஞ் சிறப்பு. பூமி சம்பந்தமாகத் தொழில் செய்வோர் இவரைச் சேவித்தால் மென்மேலும் வளர்ச்சியடைய உறுதுணையாக விளங்குகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  பண்டைய காலத்தில் கொங்கு நாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஆறை நாடும் ஒன்று. தற்போதுள்ள அவினாசி மற்றும் கோவை பகுதிகள் ஆறை நாட்டில் அடங்கும். கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகே, காஞ்சி மாநதி எனும் நொய்யல் ஆற்றின் வடகரையில் தொண்டாமுத்தூர் உள்ளது. அவ்வூரின் அருகே உள்ள பரமேஸ்வரன் பாளையத்தில் மிக புராதனமான வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் பெருமாள் முடியில் பெருமாள் கோயிலும் அடிவாரத்தில் இக்கோயிலும் அமைந்துள்ளது. இத்தலம் 1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ் பெற்று விளங்கியதை கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறியப்படுகின்றது. கி.பி. 800 க்கு பின் கங்க மன்னர்கள் சோழர்கள் வென்று கொங்கு நாட்டைக் கைப் பற்றிய போது இக்கோயிலையும் சோழ மண்டலத்துடன் இணைத்துக் கொண்டனர். கி.பி. 1004 முதல் 1045 வரை சூரிய சந்திர கிரணங்களால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்காக இத்தலம் பிரசித்தி பெற்றிருந்ததை கலிமூர்க்க விக்ரமன் - 1 எனும் மன்னன் காலத்து கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 1265 முதல் 1285 வரை கொங்கு நாட்டை ஆண்ட பிரசித்தி பெற்ற மன்னன் வீரபாண்டியன் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பணியும் சிறப்பாக நடைபெற்றன.

பின்னர் 1350 வரை கேரள நாட்டின் சிற்றரசர்களான வீர நாராயணன், கோகண்டன் ரவி, வீரகேரளன் ஆகியோர் மேலும் திருப்பணிகள் செய்த விபரம் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. விஜய நகரத்தை ஆண்ட விஸ்வநாத நாயக்க மன்னரது மனைவியின் ஆசைப்படி கோவிலைச் சீரமைத்து தங்கத்தினாலும், வெள்ளியினாலும் கலசங்களும் கவசங்களும் பதித்து, கொங்கு நாட்டிலேயே இந்தக் கோயிலுக்கு இணையான கோயில் ஏதும் இல்லை என எண்ணும்படி செய்து அழியாப் புகழ் பெற்றான். இத் திருக்கோயிலின் மதிற்சுவர் விஜய நகர பாணியில் கோட்டை மதிற்சுவர் போல் கட்டி இருந்தனர். மதிற்சுவற்றில் 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில் 108 விளக்கு மாடங்களை அமைத்திருந்தனர். இக் கோயிலின் பிரமாண்டத்தை அதன் மதிற்சுவற்றையும், திருக்குளத்தின் பரப்பரளவையும், கோயிலின் முன் உள்ள விஸ்தாரமான நிலப்பரப்பையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம். வைணவ கோயில்கள் என்றாலே புஷ்கரணி, ராஜகோபுரம், விமானம், கருட மண்டபம், கோட்டை போன்ற அம்சம் மற்றும் விலாசமான பிரகாரம் இருக்க வேண்டும் என ஆகம சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கொங்கு சோழர்கள் கொங்கு பாண்டியர்கள், கொங்கு சேரர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் இந்த அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஒப்பற்ற கோயில் இது. இவ்வாறு சிறப்புடன் விளங்கிய இத் தலம் இயற்கை சீற்றங்களாலும், அந்நிய படையெடுப்புக்களாலும் சிதைந்து நலிவுற்றது. கி.பி. 1300-1400 வருட கால கட்டத்தில் முகமதியர்களின் படையெடுப்பால் மூன்றுமுறை இக் கோயில் சூறையாடப்பட்டது. அதன்பின் ஹொய்சாள மன்னன் வீரவல்லாளன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. அன்னியர்களால் சீர்குலைந்திருந்த இத்தலத்தை பார்வையிட்ட மைசூரை ஆண்ட நவாப் ஹைகர் ஆன இந்து - இஸ்லாமியர்களின் சகோரத்துவத்தை பேணிக்காக்கும் வகையில் இக்கோயிலுக்கு 32 ஏக்கர் பூமியை கொடையாக வழங்கியுள்ளார். கோவிலைப் பராமரிக்க அர்ச்சகர் ஒருவரை நியமித்து, அவர் வாழ்க்கை நடத்தவும் கோவிலைப் பராமரிக்கவும் நிலத்தின் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார். இத்தனை சிறப்புக்களோடு விளங்கிய இத்தலம் நாளடைவில் சிதிலமடைந்து பல ஆண்டுகள் கவனிப்பாரற்று கிடந்தது. யாரும் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் குமுதம் ஜோதிடம் ஆசிரியர் (ஏ.எம்.ஆர்) மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களுக்கு கோயிலைப் பற்றிய நிலை தெரிவிக்கப்பட்டது. இருவரும் நேரில் வந்து பார்வையிட்டு, திருப்பணிகளைத் தொடங்க பெருமுயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக 27.12.2012 அன்று திருப்பணி தொடங்கப்பட்டது. ஏராளமான அன்பர்கள் தாமாகவே முன் வந்து பணமாகவும், செங்கல், சிமெண்ட் மற்றும் மணல் போன்ற பொருட்களை வழங்கி உதவியதன் பலனாக கோயில் அற்புத வடிவில் உருப்பெற்றது. திருப்பணி செய்யும்போது கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தை உள்ள நிலையிலேயே மாற்றாமல் சீர்செய்துள்ளனர். கோபுரம் (விமானம்) அதிகமாக சிதைந்து இருந்ததால் விமானத்தை மட்டும் அகற்றி விட்டு புதியதாக அமைக்கப்பட்டது. கருவறையில் 1200 ஆண்டுகள் புராதனமான அதே வெங்கடேசப் பெருமாள் முகத்தில் புன்னகை தவழ ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு சக்கரதாரியாக நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்திலும் அக்டோபர் மாத இரண்டாவது வாரத்திலும் காலையில் சூரிய ஒளிக்கதிர் கருவறையில் எழுந்தருளி இருக்கும் மூலவர் மீது விழும் அற்புத காட்சி - சூரிய பகவானே தன் ஒளிக்கதிர்களால் கொங்கு திருப்பதி பெருமாளைத் தொழுவதாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. இக்கோயிலை உருவாக்கிய சிற்பிகள் வாணியல் சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்ததை உறுதி செய்கின்றது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar