Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோதண்டராமஸ்வாமி
  உற்சவர்: வைகுந்தநாதர்
  அம்மன்/தாயார்: கனகவல்லித்தாயார்
  ஊர்: காவேரிப்பாக்கம்
  மாவட்டம்: வேலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்டஏகாதசி, ஸ்ரீராமநவமி, ஹனுமத்ஜெயந்தி, பிரதிஷ்டாபன உத்ஸவம் (சம்ப்ரோக்ஷணதினம்), புரட்டாசி சனிக்கிழமைகள், நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை போன்ற உத்ஸவங்களை இந்த ஸபாஉறுப்பினர்கள், கிராம மக்களின்ஒத்துழைப்போடு, சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  பரமபதத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதனே இத்திருக்கோயிலில் சேவை சாதிப்பதால், இங்கு பரமபதவாசல் என்று ஒரு தனிவாசல் கிடையாது. பிரதான வாசல் வழியே தான் வைகுண்ட ஏகாதசிஅன்றும், மற்ற எல்லா விசேஷ நாட்களிலும் வைகுந்தநாதர் புறப்பாடு கண்டருளுகின்றார் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், அரக்கோணம்தாலுக்கா, அய்யம்பேட்டை சேரி, (வழி) காவேரிப்பாக்கம், வேலூர்-632 508.  
   
போன்:
   
  +91 98426 19900, 91760 72181  
    
 பொது தகவல்:
     
  இந்தத்திருக்கோயில் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயிலின் கர்ப்பக்கிரக பின் புறமதில்சுவரில் 1881-ம்ஆண்டில், 10பேர்சேர்ந்து இக்கோயிலைத் திருப்பணி செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில் என்று அரசுக் குறிப்பேடுகளில் குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டாலும், இங்கு பிரதானமூர்த்தியாக ஸ்ரீபரமபதநாதரே, ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேதராக ஆதிசேஷன்மடியில் வீற்றிருக்கின்றார். மகாமண்டபத்தின் வலதுபுறம் தாயார் கனகவல்லி என்ற திருநாமத்துடன் பத்மாசனத்தில் தனது திருக்கரங்களில் தாமரைமலர் ஏந்திய எழில்கோலத்துடன் அமர்ந்து சேவை தரும் அழகான தனிசன்னதி அமைந்துள்ளது.

இடதுபுறம், ஆஸ்தானபெருமாளான ஸ்ரீராமபிரான், சீதாதேவியுடனும், இலக்குவன் மற்றும் ஆஞ்சநேயருடனும் நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மற்றும் விஸ்வக்க்ஷேனர், உடையவர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் மூலவிக்ரகங்களாக எழுந்தருளியுள்ளனர். உற்சவமூர்த்திகள் - ஸ்ரீவைகுந்தநாதர், ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேதராக நின்றதிருக்கோலத்திலும், மற்றும் கனகவல்லித்தாயார், சீதாதேவி சமேத ஸ்ரீராம, லக்ஷ்மண, ஆஞ்சநேய விக்ரகங்களும், ஸ்ரீசுதர்ஸன-நரசிம்மர், ஸ்ரீகோபாலகிருஷ்ணன், ஸ்ரீலஷ்மிஹயக்ரீவர், செல்வர்ஆகிய விக்ரகங்களும் இத்திருக்கோயிலில் உள்ளன. இக்கோயிலின் திருப்பணி முதலில் இந்தச் சிறிய திருவடியில் தொடங்கி, படிப்படியாக நடந்தேறி, இறுதியில் விமானத் திருப்பணியில் நிறைவடைந்தது. எவ்வளவோ முயன்றும், இந்தச் சிறிய திருவடியின் திருப்பணியை முடிக்காமல் மற்றதிருப்பணிகளை நடத்த முடியவில்லை என்பது அனுபவ பூர்வமாக நடந்தேறிய நிகழ்ச்சி.

சிறிதும் மாறாமல் திருப்பணி செய்யப்பட்டு, 23-05-2010 அன்று திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயரும், மடாதிபதியுமான ஸ்ரீமான் உ.வே. ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரியார் ஸ்வாமிகள்அவர்கள் இத்திருக்கோயிலின் சம்ப்ரோக்க்ஷணத்தை நடத்திவைத்தார்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீபரமபதநாதனின் பேரருளைப் பெற்றனர். ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயில்பக்த ஜனசபா என்ற அமைப்பு, ஒருபதிவு செய்யப்பட்ட அமைப்பு. இந்தக் கோயிலின் திருப்பணிக்காகவும், மற்றும் சில சமூக சேவைகளின் மூலம் இந்த கிராம மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இங்குள்ள கிராம மக்கள் அனைவருமே இதன் அங்கத்தினர்கள். சேவை மனப்பான்மையுடையவர்களை கமிட்டி உறுப்பினர்களாக பொறுப்பில் அமர்த்தி, இந்தக்கோயிலின் திருப்பணி மற்றும் நித்திய பூஜைகள், திருவிழாக்களையும், இந்த சபாநடத்திக் கொண்டு வருகிறது. வெளியூர் அன்பர்களும், இந்தச்சேவையில் துணைபுரிகின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  அனைத்து விதமான வேண்டுதல்களும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், பக்தர்கள் மாலை அணிந்து ஒருமண்டலம் வரை தீவிரவிரதம் அனுஷ்டித்து, தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  பரமபதநாதன், கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு, ஆதிசேஷன் குடைபிடிக்க, சிம்மாசனத்தில் சங்கு சக்ரதாரியாகத் திருமாமணிமகுடம் தாங்கி, புன்னகை தவழ, தனது வலது திருவடியை மடித்தும், இடது திருவடியைத் தொங்கவிட்டுக் கொண்டும் கம்பீரமாக, அமர்ந்ததிருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். பரமனின் இடதுகரம் தரையில் ஊன்றியும், இடதுதிருவடியின் பின்புறம் சற்றே எழும்பியும், இடதுகாலின் கட்டை விரல் சற்றேபூமியை அழுத்தியும் உள்ள திருக்கோலம். தன்னை நினைக்கும் பக்தனின் இடத்திற்கு, தானே நேரில் சென்றுஅபயமளிப்பதாக உள்ளது. மடித்த வலது திருவடியின் மீது தன் நீட்டியவலது கரத்தைத் தன் திருவடி நோக்கிக் காண்பித்திருப்பது, தன்னை உளமார நினைத்து தன் திருவடியைசரணடைபவர்களுக்கு நான் ஊன்றுகோலாகத் திகழ்வேன் என்பதைக் காட்டுகிறது. பகவானின் நெற்றிப்பொட்டைக்கூட கல்லிலே மிக அருமையாகப் படைத்திருக்கிறான் அந்த தெய்வீகச் சிற்பி. பகவானின் வலதுபுறம் ஸ்ரீதேவித் தாயார் தனது வலது திருவடியைத் தொங்கவிட்டு, இடது திருவடியைமடித்துக் கொண்டும், இடதுபுறம், ஸ்ரீபூமிதேவித் தாயார் தனது வலது திருவடியை மடித்து, இடதுதிருவடியைத் தொங்கவிட்டுக் கொண்டும் அமர்ந்து சேவை சாதிக்கின்றனர்.

பரமபதநாதனின் தெய்வீகசக்தி: திசைமுகன் சேரியில் எழுந்தருளியிருக்கும் பரமபதநாதனை அஷ்டாக்ஷர மந்திரமூர்த்தி என பெரியோர்கள் பூஜித்து வருகின்றனர். இப்பெருமானின் கருவறைமுன்அமர்ந்து, அஷ்டாக்ஷர மகாமந்திரமாகிய ஓம்நமோநாராயணாய என்னும் திவ்யமந்திரத்தை எவர்ஒருவர், ஒருமண்டலம் வரை தினந்தோறும்108அல்லது 1008தடவை பக்திஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருகிறார்களோ, அவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் ஏற்படுவது, பிரத்தியட்க்ஷமானஅனுபவமாகும்

கருடாழ்வாரின்விசேஷம்: பெரும்பாலான வைணவக்கோயில்களில், பெரிய திருவடிஎன்றழைக்கப்படும் கருடாழ்வார், பெருமாளை நோக்கி கையை கூப்பிக்கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பார். இத்தலத்தில், கருடாழ்வார், பெருமாளுக்கு நேர் எதிரே, ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை குத்துக் காலிட்டுக்கொண்டும், பெருமாளை தன் தோளில் ஏற்றிக்கொண்டு, அவரை நினைக்கும் பக்தர் இடம்நோக்கிச் செல்லத் தயாரான நிலையில் வீற்றிருக்கின்றார்.

ஆஞ்சநேயரின்விசேஷம்: கோயிலுக்கு வெளியே, சிறியதிருவடி என்றழைக்கப்படும் ஆஞ்சநேயர், இடையில் ஒருசிறியகுத்துவாளுடன், நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவர் ஒருவரப் பிரசாதி. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய ஆஞ்சநேயருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், பக்தர்கள் மாலை அணிந்து ஒருமண்டலம் வரை தீவிரவிரதம் அனுஷ்டித்து, தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இத்திருக் கோயிலின் மூன்றாம் ஆண்டு சம்ப்ரோக்ஷண தினத்தை ஒட்டி, கடந்த 23-05-2012-ம் நாள் அன்று ஸ்ரீயோக நரசிம்மருடன் கூடிய ஸ்ரீசக்கரத்தாழ்வார் மூலவர் விக்ரகங்கள் திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் அவர்களின் அனுக்ரஹத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
 
     
  தல வரலாறு:
     
  அனைத்து ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்யும் பிரம்மதேவருக்கு நான்கு திருமுகங்கள். ருக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளையும் நோக்கி சதாஸ்மரணம் செய்து கொண்டிருப்பதற்காகவே நான்கு முகங்களை ஏற்றதால், பிரம்மனுக்கு திசைமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. சதாவேதங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதால், அனைத்து ஜீவராசிகளையும் படைக்கும் சக்தியைப் பெற்றார் பிரம்மதேவன். ஒருசமயம், பிரம்மதேவருக்கு வேதங்களின் பொருள்பற்றி ஐயம் ஏற்பட்டது. அந்தச்சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, தனதுபடைப்புத் தொழிலை நிறுத்திவைத்து, பகவான் ஸ்ரீமன்நாராயணனைக் குறித்து மிகக்கடுமையான தவத்தினை மேற்கொண்டார். பிரம்மா தன் தவத்தைமேற்கொண்ட பரமபவித்திரமான இடமேதிசைமுகன் சேரி என்கிற புண்ணிய பூமியாகும். பிரம்மதேவரின் மிகக்கடுமையான தவத்தினால் திருவுள்ளம் உகந்த ஸ்ரீமன்நாராயணன், பரமபதம் என்னும் தனது திவ்ய உலகில் எழுந்தருளியுள்ளபடி பிரம்மனுக்குக் காட்சியளித்து, வேத ரகசியங்களை உபதேசித்தருளினார்.

கூர்மாதீன்திவ்யலோகம் - தனதுமணிமயமண்டபம்
தத்ரசேக்ஷின்தஸ்மின்தர்மாதிபீடம் - ததுபரிகமலம்
சாமரக்ராஹிணீச்சவிஷ்ணுதேவிம்விபுஷாயுதகணமுரசும்
பாதுகேவைநதேயம்ஸேநேஸம்துவாரபாலாந்
குமுதமுககணாந்விஷ்ணுபக்தாந்ப்ரபத்யே!

என்றபடி பகவான் முக்திநிலைஎன்று பெரியோர் போற்றி வணங்கும் புண்ணிய உலகமான பரமபதத்தில், தான் வீற்றிருக்கும் அற்புதமான தரிசனத்தைப் பிரம்மதேவருக்கு அளித்துத் திருவருள்புரிந்தார். பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி, அந்த திவ்யதரிசனத்தை எக்காலத்திலும் பக்தர்கள்அனைவரும் தரிசித்து, அதன் பலனாகப் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறவேண்டி, அதே பரமபத திருக்கோலத்தில் ஸ்ரீமன்நாராயணனும் திசைமுகன் சேரியில் எழுந்தருளிவிட்டான். ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108வைணவ திவ்யதேசங்களில், 106திவ்யதேசங்கள்தான்பக்தர்களால்தரிசிக்கக்கூடியவை. 107 மற்றும் 108-வது திவ்யதேசங்களாகக் கூறப்படுவது, திருப்பாற்கடலும், பரமபதமும் ஆகும். இந்த இருதிருத்தலங்களுமே, வேலூர் மாவட்டத்தில், காவேரிப்பாக்கம் அருகே, அபிமான க்ஷேத்திரங்களாக அமைந்திருப்பது பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்தற்கரிய பேறுகளாகும். சத்ய வ்ரத க்ஷேத்ரம் என்னும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமன் நாராயணன் தேவாதிராஜனாக நின்றதிருக்கோலத்திலும், காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் என்னும் அற்புதப் பதியில் பள்ளிகொண்ட பெருமாளாகவும், வடக்கே சோளசிங்கபுரம் என்னும் சோளிங்கரில் அக்காரக் கனியாகத் திகழும் ஸ்ரீஅமிர்த பலவல்லி தாயார் சமேத ஸ்ரீநரசிங்கப்பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலும் எல்லைகள்போல் அமைந்திருக்க, திசைமுகன் சேரியில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேதராக, ஆதிசேஷன்மடியில், அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான் ஸ்ரீபரமபதநாதன்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பரமபதத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதனே இத்திருக்கோயிலில் சேவை சாதிப்பதால், இங்கு பரமபதவாசல் என்று ஒரு தனிவாசல் கிடையாது. பிரதான வாசல் வழியே தான் வைகுண்ட ஏகாதசிஅன்றும், மற்ற எல்லா விசேஷ நாட்களிலும் வைகுந்தநாதர் புறப்பாடு கண்டருளுகின்றார் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar