Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சங்கரநாராயணர், மங்கள சனீஸ்வரன்
  உற்சவர்: மங்கள சனீஸ்வரன், நாராயணி, யோக பைரவர்
  அம்மன்/தாயார்: நாராயணி
  ஆகமம்/பூஜை : ஒரு கால பூஜை
  புராண பெயர்: சனீஸ்வரவாசல்
  ஊர்: காரையூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 தல சிறப்பு:
     
  இது சங்கர நாராயண சுவாமி கோயிலாக இருந்தாலும்,மங்கள சனீஸ்வரன் கோயில் என்றால் தான் தெரியும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சங்கர நாராயணி சமேத சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் அருள்மிகு மங்கள சனீஸ்வரன் திருக்கோயில், ஈஸ்வர வாசல், காரையூர் போஸ்ட், கங்களாஞ்சேரி வழி, திருவாரூர் - 610001.  
   
    
 பொது தகவல்:
     
  காசி மாநகரத்தை ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்த ராணி சம்யுக்தையிடம்மந்திரை என்ற பெண் அரண் மனைப் பணிப்பெண்ணாக இருந்தாள் அவள் சுதாங்கன் என்ற மகத நாட்டு இளவரசனை விரும்பினாள். ஒருநாள் மகாராணி அந்தப்புரத்தில் அரசனுடன் தனியாகப் பேசிக்கொண்டிருந்த போது அனுமதி பெறாமல் நுழைந்து விட ராணி கோபமுற்று, உனக்கு, மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு, திருமணம் ஆகாமல் கன்னியாகவே இருக்க கடவாய், புத்திர பாக்கியமும் இல்லாமல் போகட்டும்! என்று சாபமிட்டாள் மேலும் நாங்கள் காசி விஸ்வநாத சுவாமியை பரம்பரையாக வழிபட்டு வருவதால் எமது சாபம் நிச்சயம் பலிக்கும்! நீ உடனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடு, என்று கட்டளை இட்டாள். அங்கிருந்து வெளியேறிய அவள், சுதாங்கனைக் கண்டுபிடித்துச் சேர்ந்து தன்னுடைய சாபத்திற்குப் பரிகாரம் தேடிச்சென்றாள். இருவரும் காட்டுப் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது, சலந்திரன் என்ற அசுரன் இருவரையும் விழுங்கி விட்டான்.

அவன் வயிற்றுக்குள் சென்றவர்கள் ஏற்கனவே அசுரனால் விழுங்கப்பட்ட தேவலோக மனிதன் தேவசுதனைக் கண்டு நடந்தவற்றைக் கூறினர். உடனே அவன் நான் தேவலோக மைந்தன் அல்ல. அந்த வடிவில் வந்த கால பைரவன். சற்றுநேரத்தில் இவன் வயிற்றைக் கிழித்தபடி வெளியில் சென்று விடுவோம். வாருங்கள்! என்று கூறி, தன்னிடமுள்ள ஆயுதங்களைச் சுழற்றியபடியே இருவரையும் அணைத்துக் கொண்டு வெளியேற, அலறிய அசுரன் சலந்திரன் கீழே சாய்ந்தான். மீண்டும் எழுந்தவனை மூன்று இடங்களில் விழும்படி செய்தார் பைரவர். அந்த மூன்று துண்டுகளில் தலைப்பாகம் இத்தலத்திலும், கழுத்து முதல் உடல்வரை தென்பாதி என்ற கிராமத்திலும் கால் பகுதி நாகூர் அருகில் உள்ள தெத்தி வடகுடியிலும் விழுந்தன. அசுரன் தான் சாகும் தறுவாயில், பைரவரே! தாங்கள் ஈஸ்வர வடிவம் என்று அறிவேன். என் உடல் பகுதிகள் அனைத்து பக்தர்களாலும் போற்றும் படியாகிவிட அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதைத் கேட்டு, வீரம் மிக்க நீ வீரனார் என்ற திருப்பெயரில் மூன்று பகுதி மக்களுக்கும் அருள்புரியும் தெய்வ சக்தியைப் பெறுவாய் என்று திருஉளம் செய்தார். பின்னர் சுதாங்கனுக்கும் மந்திரைக்கும் மாங்கல்ய தோஷம் விலக பரிகாரம் கூறினார்.

நீங்கள் மகிழ்ச்சியோடு திருமண வாழ்க்கையைத் தொடங்கதிரு ஆரூர்க் கோட்டத்தின் வட கிழக்காக அமைந்துள்ள தலம் சென்று, அங்கு அருளும் சங்கர நாராயணரையும் நாராயணி அம்பாளையும் வணங்கி, மங்களச் சனிபகவானை எள்தீபமிட்டு வழிபட்டால் உங்கள் மணம் போல் மாங்கல்யம் உண்டாகும். என்று வாழ்த்தி அனுப்பினார். மேலும் அங்கே யாம் மேற்கு முகம் காட்டி யோக பைரவராய் நின்று அருள்வோம் என்றார். விருத்த கங்கா நதியை ஒரு மரப்பாலத்தின் வழியாகக் கடந்து சென்றால் முதலில் சனிபகவானை சிவன் சன்னிதி வலது பெருங்கோஷ்டத்தில் தரிசிக்கலாம். ஏகதள விமானக் கருவறையில் சிவலிங்கமாக மூன்றரை அடி உயரத்தில் சங்கர நாராயணர். சங்கு, சக்கரம் அபய வரத அஸ்தத்துடன் நாராயணி அம்பாள் நின்ற நிலையில் காட்சிதர.

திருச்சுற்றில் கி.பி. 6- ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட வலம்புரி கணபதி, நாராயணர் லக்ஷ்மி, வள்ளி- தெய்வானையுடன் முருகன், சோழர்காலத்திய சண்டிகேஸ்வரர்,  நந்திதேவர், உள்ளனர். சிவன் சன்னிதிக்கு முன்பாக கோயில் வளாகத்திற்கு வெளியே வீரனார். தலைப்பாகம் பாரம்பரிய கிராமப்புற வழிபாடுகளை எடுத்துக்கூறும் வகையில் செங்கற்சுவர் ஓட்டுக் கட்டடத்துடன் காணப்படுகிறது. இந்த வீரனார் சுவாமி பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் காலசந்தி பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்ட இக்கோயில் இன்று சிதிலமடைந்து காட்சி தருகின்றது. விருத்த கங்கா நதியில் கோடைகாலத்தில் நீராடச் சென்றால் ஊற்றில்தான் புனித நீராடல் செய்ய வேண்டும்.
 
     
 
பிரார்த்தனை
    
  ஆயுள்பாவம், மாங்கல்யபாவம், சாதனைபாவம் ஆகிய மூன்று அங்கங்களிலும் அல்லல்கள் வந்தால் இங்கு வந்து மங்கள சனீஸ்வரனை வழிபட்டால் சோதனைகளின் கடுமை குறைந்து நிம்மதி ஏற்படும் நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  சனியின் குருநாதரான பைரவர் இங்கே யோக பைரவராக அருள்வதால் அஷ்டமி, பவுர்ணமி, காலங்களில் செவ்வரளி மலரால் அர்ச்சித்து, புனுகு சாற்றி வழிபட்டால் பொருளாதார நிலை சீராகும் என்கிறனர்.  
    
 தலபெருமை:
     
   சனிபகவான் நீராடிய நதி விருத்த கங்கா என்ற பெயருடன் இத்தலத்தை ஒட்டியவாறு ஓடுகிறது. பொதுவாக நதிகளின் சாஸ்திரப்படி வடக்கு தெற்காகப் பாய்ந்து செல்லும் நதியில் ஸ்நானம் செய்தால் நாம் தெரியாமல் செய்த பாவங்களும் விலகும். கர்ம வினைகள் அகலும் என்பது ஐதிகம். ஆயுள்காரகனாக விளங்கும் சனி பகவானும் கால பைரவரும் இங்கே நதிக்கரையில் அருள்வதால் அமாவாசை. அவரவர் முன்னோர்களின் திதி நாளில் நதிக்கரையில் அமர்ந்து பித்ரு தோஷங்கள் விலகவும். முன்னோரின் ஆன்மா சாந்தி அடையவும் மோட்ச தீபம் கரையில் ஏற்றி பித்ரு தர்ப்பண பூஜைகள் செய்யலாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளயபட்ச அமாவாசை தினங்களில் இங்கே முன்னோர் வழிபாடு செய்ய பித்ருக்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். சனி தசைக்காலம் நடப்பில் உள்ளவர்களும், ஏழரைச் சனி கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனியால் பாதிக்கப்பட்டவர்களும் காட்டுப் பகுதியில் நதி சூழ்ந்த அமைதியான சூழலில் கிழக்கு முகம் நோக்கி நின்று ஈசனை வணங்கிடும் சனீஸ்வரனை இத்தலம் வந்து வழிபட வாழ்க்கையில் வெற்றியின் வாசல் திறக்கும்.  
     
  தல வரலாறு:
     
  சனிபகவான் என்றால் அனைவருக்கும் ஒருவிதமான பயம் அடிமனதில் வந்துவிடும். காரணம், ஆயுள்காரகன், சாதனைக்காரகன், மாங்கல்யகாரகன் என்ற பொறுப்புகளைப் பெற்றவர் சனீஸ்வரன். அவருக்கு திருநள்ளாறுக்கும் திருக்கொள்ளிக் காட்டிற்கும் நடுவே சனீஸ்வரவாசல் என்ற இடத்தில் பரிகாரத் தலம் ஒன்று அமைந்திருப்பது பலருக்கும் தெரியாது. இத்தலத்தில் சனீஸ்வரன் ஒரு நதிக்கரையில் நின்று சிவபெருமானை வணங்கியபடி மங்கள சனீஸ்வரனாக அருள்தருகிறார். ஒரு சமயம் திருக்கொள்ளிக்காட்டிலிருந்து நள மகாராஜனைப் பிடிப்பதற்காக திருநள்ளாறுக்குத் தனது காக்கை வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார் சனிபகவான். வழியில் இருட்டும் நேரம் வந்து விடவே, கண் தெரியாமல் காக்கை தவித்தது.

உடனே அருகிலுள்ள சிவன் கோயிலில் இரவு தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு காலையில் புறப்படலாம் என்று சனிபகவான் சொல்ல, அதன்படி இருவரும் அங்கு இறங்கி ஒரு நாள் தங்கினர். சனீஸ்வரன் ஒருநாள் தங்கியபடியால் இந்த தலத்திற்கு சனீஸ்வரவாசல் என்ற பெயர் ஏற்பட்டது. காரையூர் என்றும் அழைக்கப்படுகிறது. சனிபகவான் மறுநாள் காலையில் எழுந்து வெளிவந்த போது சிவன்கோயில்களின் வாசலில் வடக்கு தெற்காக ஓடுகிற நதியைக் கண்டுவியந்து அதில் நீராடி, அங்குள்ள சுவாமி சங்கரநாராயணரை வழிபட்டார். சிவன் என்ற மங்களனை வழிபட்டதால் மங்ள சனீஸ்வரன் என்ற பெயரைப் பெற்றுத் திகழ்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இது சங்கர நாராயண சுவாமி கோயிலாக இருந்தாலும், மங்கள சனீஸ்வரன் கோயில் என்றால் தான் தெரியும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar