Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருவேங்கடநாதப் பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி-பூதேவி
  ஊர்: சூலூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்தலத்தில் ஏகாதசியன்றும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்கழி 30 நாட்களும் பாவை நோன்பும், சிறப்பு ஆராதனையும் உண்டு. புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் முக்கியப் பெருவிழாவாகும். விஜயதசமியன்று தோரோட்டமும், அன்றிரவு அம்பு சேவை நிகழ்ச்சியும் நடைபெறும். சூலூரில் உள்ள 9 கோயில் உற்சவ மூர்த்திகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளி திருவேங்கடநாதப் பெருமாள் முன்னிலையில் அணிவகுத்து நிற்பர். மைதானத்தின் நடுவில் வாழைமரம் நடப்பட்டிருக்கும். ஒவ்வொரு உற்சவமூர்த்திக்கும் வில், அம்பு வழங்கப்பட்டு வாழை மரத்தை நோக்கி அம்பை எய்துவர். அசுரர்களை சம்ஹாரம் செய்து கெட்டவர்களை அழித்து, நல்லவற்றை நிலை நாட்டுவதைக் குறிக்கும் வகையில் இந்த உற்சவம் நடத்தப்படும்.சூலூரில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். தேர்த்திருவிழா இல்லையெனில் எந்தக் கோயிலிலும் நவராத்திரி விழா இல்லை. இது இந்த ஊர் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாகும்.  
     
 தல சிறப்பு:
     
  சூலூரில் கோயில் கட்டிய போது வியாபாரி தன் மாடுகளை காங்கேயம்பாளையத்திலேயே விட்டுவட்டு வந்து விட்டார். அந்த மாடுகளை பெருமாள்தான் பாதுகாத்து வந்தார். அதனால் உத்தண்ட ராயர் கோயில் பெருமாளுக்கு நந்தி வாகனமாக விளங்குகிறது. விஷ்ணு கோயிலில் நந்தி இருப்பது அபூர்வம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 1 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயில், சூலூர், கோவை.  
   
போன்:
   
  +91 78100 21957 
    
 பொது தகவல்:
     
  சூலூர் கோயில் திருப்பணிகள் செய்த போது ஒரு துண்டு கல்வெட்டு கிடைத்துள்ளது. சர்க்கார் பெரியபாளையம் செலக்கரச்சல், இடிகரை, கோயில் பாளையம் முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் பிற்காலத்தில் மன்னன் கோக்கண்டன், வீர நாராயணன், வீர ராஜேந்திர சக்ரவர்த்தி, சுந்தரபாண்டியன் ஆகியோர் சூலூர் கோயில் திருப்பணிக்கு உதவி செய்ததும்; நில தானம் செய்ததும் கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்கள் மூலம் தெரியவருகிறது. இத்தலம் வைணவ ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. கற்களால் அமைக்கப்படும் திருமேனி துருவபேரம் என்பர். இப்பெருமான் துருவபேரமாக திருமஞ்சன திருமேனியாக அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட உயர்ந்த மதிற்சுவருடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன் பகுதியில் அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். கோயிலில் நுழைந்ததும் முதலில் வசந்த மண்டபம். அதில் சுதையாலான தசாவதார சிற்பங்களைக் காணலாம். கொடிமரமும், தீப ஸ்தம்பமும் இம் மண்டபத்தில் உள்ளன. கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார், மூலவர் திருவேங்கடநாதப் பெருமாள். அவரது திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இதுவும் அபூர்வமாகச் சொல்லப்படுகிறது. பெருமாளுக்கு எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார் சேவை சாதிக்கிறார். ஆழ்வார்கள், மகாலட்சுமி ஆகியோரை தனி சன்னதியில் தரிசிக்கலாம்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது அனைத்து பிரார்த்தனைகளையும் இந்த பெருமாளிடம் முறையிடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் அனைத்துவித வேண்டுதல்களும் நிறைவேறியதும் மிளகுகளை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  மிளகு வியாபாரி சூலூரில் கோயில் கட்டியதால் கோபமுற்ற பெருமாள், தன் சன்னதிக்குள் வேகவைத்த நைவேத்யம் எதையும், கொண்டு வரக்கூடாது என உத்தரவு இட்டுவிட்டார். எனவே ராயர் கோயிலில் காப்பரிசியாலேயே (ஊற வைத்த பச்சரிசி, வெல்லம், தேங்காய், அவல் சேர்ந்த கலவை) நைவேத்யம் செய்யப்படுகிறது. சூலூர் கோயிலில் மிளகு மட்டுமே நைவேத்யம் செய்யப்படுகிறது. அதனால் மடைப்பள்ளியே இல்லை. சைவமும் வைணவமும் இணைந்தது உத்தாண்டராயர் கோயில். பெருமாளுக்கு பெரிய குளமும் சிவனுக்கு சின்ன குளமும் என்று ஏரிகளால் சூழப்பெற்று தாழம்பூ செடிகள் நிறைந்த தலம்.

 
     
  தல வரலாறு:
     
  ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோயில் குரல் என்ற மரங்கள் நிறைந்த காட்டின் மையப் பகுதியாக இத்தலம் ஆதியில் விளங்கியது. இதன் கிழக்கே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம்பாளையத்தில் அமைந்துள்ள உத்தண்ட ராயர் கோயிலில் பெருமாள் மட்டும் சிறிய கீற்றுக்கொட்டகைக்குக் கீழ் எழுந்தருளியிருந்தார். அதன் முன்பு பெரிய மைதானம் இருந்தது. அங்கு வியாபாரிகள் தானியங்களை பொதிமூட்டைகளாகக் கட்டி மாடுகளின் மீது வைத்துக் கொண்டு வருவார்கள். சிலநாட்கள் அங்கேயே தங்கி, அந்தப் பொருட்களை சுற்றியுள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தனர். ஒருநாள் இரவு நேரம். மிளகு வியாபாரி ஒருவரின் முன் முதியவர் வேடத்தில் பெருமாள் தோன்றி, எனக்கு வயிறு வலிக்கிறது. கொஞ்சம் மிளகு கொடு என்றார். தூக்கம் கலைந்த கோபத்தில் என்னிடம் மிளகு இல்லை இவை உளுந்து முட்டைகள் என்றார், வியாபாரி, இவையெல்லாம் உளுந்து மூட்டைகளா? சரி, அப்படியே ஆகட்டும் எனக் கூறிவிட்டுச் சென்று விட்டார், முதியவராக வந்த பெருமாள். மறுநாள் மூட்டைகளை மாடுகள் மீது ஏற்றிக்கொண்டு சந்தைக்கு வந்து சேர்ந்தார், வியாபாரி. அங்கு மூட்டைகளை அவிழ்த்துக் கீழே கொட்டும்போது, மூட்டைகளில் உளுந்தே இருந்தது. அதைக் கண்ட வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பெரியவர்தான் தனது ஆட்களைக் கொண்டு உளுந்து மூட்டைகளை மாற்றி வைத்திருக்க வேண்டும். வயது முதிர்ந்த அவரால் நீண்ட தூரம் சென்றிருக்க முடியாது. எப்படியாவது அவரைப் பிடித்துவிட வேண்டும் என எண்ணினார், வியாபாரி. ஆனால் எங்கு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. களைப்பு மிகுதியால் சோர்ந்து போய் ஒரு மரத்தடியில், அமர்ந்த போது மிக அருகில் ஒரு கல் தென்பட்டது. அதன் அருகில் அமர்ந்து அக்கல்லின் மீதுசாய்ந்து கொண்டு,)ஐயா பெரியவரே, எங்கே போனீர்கள்? மிளகு மூட்டைகளை எடுத்துக் கொண்டு உளுந்து மூட்டைகளை மாற்றிப் போட்டு விட்டீரே உளுந்து அந்த விலைக்குப் போகாதே எனக் கூறி, கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார் வியாபாரி. அப்போது இரண்டாவது முறையாக அந்தணர் ரூபத்தில் அங்கு வந்த முதியவர், கவலைப்படாதே! மிளகு போனது போனதுதான். இந்த உளுந்து நல்ல விலைக்கு விற்கும் விற்றத்தில் லாபத்தை மட்டும் வைத்து ஒரு ஞாபகச் சின்னமாக செய்து விடு எனக் கூறி மறைந்தார்.)

அதைக் கொண்டு கோயில் கட்டு! உன் தலைமுறையே தழைக்கும்! எனக் கூறினார். முதியவரிடம் ஏதோ ஆற்றல் இருப்பதை உணர்ந்த வியாபாரி, அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சந்தைக்குத் திரும்பினார். உளுந்தை விற்றதில், பெரியவர் சொல்லியபடி பெருந்தொகை லாபமாக கிடைத்தது. அந்த லாபத்தில் சூலூரில் கட்டிய கோயில்தான் திருவேங்கடநாதப்பெருமாள் கோயில். கோயிலை அவர் கட்டி முடித்ததும் பெருமாள் அவர் முன் தோன்றி, முதியவராக வந்தது நான்தான். நான் இருக்கும் இடம், காங்கேயம்பாளையம் ராயர் கோயில். கீற்றுக் கொட்டகையில் இருக்கும் எனக்கு கோயில் கட்டாமல், காட்டுக்குள் கட்டி விட்டாய். அங்கு நான் வர மாட்டேன்! எனச் சொல்லிவிட்டார். வியாபாரியோ நான் ஒரு கல்மீது சாய்ந்து அமர்ந்திருந்த போது தான் தாங்கள் எனக்கு ஆலோசனைகள் வழங்கினீர்கள். எனவே அக்கல் இருந்த இவ்விடத்திலேயே கோயிலைக் கட்டி விட்டேன். இப்போது கட்டின கோயிலை என்ன செய்வது? புரியாமல் கதறி அழுதான். அதற்கு பெருமாள், ஏ பக்தனே ஏன் இவ்வாறு கண் கலங்குகின்றாய்? அழுகிறாய், எதற்காக இக்காட்டினுள் வந்தாய்? என வினவ அதற்கு வியாபாரி, மிளகு மூட்டைகளைத் தேடி இங்கே வந்தேன் என பதில் அளித்தார். பெருமாள் மனம் இறங்கி, பக்தனே கவலை வேண்டாம். மிளகு போனது போனதுதான். திரும்ப கிடைக்காது. வியாபாரியோ தவறை உணர்ந்து பெருமாளிடம் மன்னிப்புக் கோரினார். மனமிரங்கிய பெருமாள், பக்தனே!) நான் உனக்கு ஒரு பிடி மிளகு தருகிறேன். இக்கோயிலில் நடைபெறும் எல்லா பூஜைகளிலும் இந்த மிளகை வைத்து பூஜித்து வா! இந்த மிளகு தீரும்வரை நான் இங்கேயும் சேவைசாதிப்பேன் எனக்கூறி, ஒரு பிடி மிளகைக் கொடுத்தார். அப்போது அவர் கொடுத்த மிளகுதான் இன்னும் தீராமல் இருந்து வருவதாகவும்; உத்தண்ட ராயர் கோயில் பெருமாள்தான் சூலூரிலும் சேவை சாதிப்பதாகவும் ஐதிகம்.  முதல் முறையாக பெரியவர் அந்தணர் வேடத்தில் வயிற்று வலிக்காக மிளகு கேட்ட இடத்தில் தான் நான் மேற்க நோக்கி அமர்ந்து நீங்கள் கட்டிய இக்கோயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் பார்வை படுவதால் எனது அனுகிரஹமும் கிடைக்கும் நான் இங்கேயே இருப்பதாகக் கொள்ளுங்கள் என்றார்.)

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சூலூரில் கோயில் கட்டிய போது வியாபாரி தன் மாடுகளை காங்கேயம்பாளையத்திலேயே விட்டுவட்டு வந்து விட்டார். அந்த மாடுகளை பெருமாள்தான் பாதுகாத்து வந்தார். அதனால் உத்தண்ட ராயர் கோயில் பெருமாளுக்கு நந்தி வாகனமாக விளங்குகிறது. விஷ்ணு கோயிலில் நந்தி இருப்பது அபூர்வம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar